சொத்துக்குவிப்பு வழக்கு: தனி நீதிபதியை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வாய்ப்பு!
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், தனி நீதிபதியை நியமித்து விசாரணைக்கு உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
18 வருடங்களாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது.
இவர்கள் 4 பேரும் தங்களை ஜாமீனில் விடக்கோரி கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டு அங்கு நிபந்தனை ஜாமீன் பெற்றனர்.
ஜெயலலிதா அப்பீல் வழக்கை இழுத்தடிக்கக் கூடாது என்றும், விரைவில் வழக்கை முடிக்க தேவையான ஆவணங்களை கர்நாடக ஹைகோர்ட்டில் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். இதன்படி கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் ஆவணங்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்கு ஆவணங்களை சரி பார்த்த பிறகு அதற்கு வழக்கு எண் வழங்கி எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று பட்டியலிடுவார்கள். இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் தொடர்ந்த ஜாமீன் முறையீட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 18ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
அப்போது ஜெயலலிதாவுக்கு அளித்த நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு தரப்பும், ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பும் வாதிடும். மேலும், கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்போது நீதிமன்றம் உத்தரவிடும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஜாமீன் மனுவை விசாரிக்கும்போதே, மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை 18ம்தேதி விசாரணையின்போது மீண்டும் உச்ச நீதிமன்றம் அழுத்தி கூறும் என்று தெரிகிறது.
கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா அப்பீல் வழக்கை துரிதமாக 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க தனி நீதிபதியை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு விசாரிக்க ரெகுலர் நீதிபதிகளால் முடியாது, நேரம் போதாது என்பதால், தனி நீதிபதியை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்பட்டால், அந்த நீதிபதி யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சாதாரணமாக ஹைகோர்ட்டில் அப்பீல் வழக்கு நடைபெற்றால் அந்த வழக்கு முடிய குறைந்தது 4 ஆண்டு ஆகும் என்பதால் ஜெயலலிதா வழக்கில் தனி நீதிபதி மூலம் தினமும் வழக்கை நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் என்று மூத்த வக்கீல்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.