தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்...விளக்கமளிக்க சட்டமன்ற சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி : தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் செயலருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், மோகன்தாஸ், பார்த்திபன், சேகர், வெங்கடேசன், தினகரன் ஆகியோர் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்தாகக் கூறி, கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் தாக்கல் செய்த மனுவில், தங்களை இடைநீக்கம் செய்திருப்பதால் தொகுதி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலை உள்ளது என்றும், எனவே இடைநீக்கத்தை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.