தீயின் கொடூர பிடியில் தப்பியது எப்படி? திகில் அனுபவத்தை கூறும் மாணவர்கள்
கும்பகோணம்: கும்பகோணம் தீவிபத்தில் சிக்கி உயிர் தப்பிய குழந்தைகள், 10 வருடத்துக்கு முன்பு நடந்த அந்த கோர சம்பவத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கௌசல்யா என்ற மாணவி கூறுகையில் "நான் அப்போது மூன்றாம் வகுப்பு படித்தேன். நான், கீழே வகுப்பில். என்னை மேலே அழைத்துவந்து உட்கார வைத்தார்கள். திடீர்னு தீ விபத்து ஏற்பட்டது. நான், எங்க மாமா பையன், பக்கத்து வீட்டுப் பசங்க நாலைந்து பேர என்னோட கூட்டிக்கிட்டுப்போயி, பெஞ்சுக்குக் கீழ நொழஞ்சிகிட்டேன். ஆனா, அதுக்குள்ள அந்தப் பசங்க என் கண் முன்னாடியே கூரை விழுந்து எரிஞ்சிபோய்ட்டாங்க.
பக்கத்து வீட்ல வேலை செய்துகொண்டிருந்த கொத்தனாரு என்னை காப்பாற்றினார். ஆனால் தீயால் கைகள் கருகிவிட்டன. என்னை மாதிரி உலகத்துல வேறு எந்தப் குழந்தைக்கும் கஷ்டம் வரக்கூடாது. என்னால் அப்பா, அம்மாவுக்கு தினமும் வேதனைதான். எங்கேயுமே நான் வெளிய போக முடியாது. இந்தப் குழந்தைக்கு கை ஏன் இப்படி இருக்குனு கேக்குறாங்க.
இதுபோல இனிமே எங்கயும் நடக்கக் கூடாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் அதிகம் படிக்கணும்னு ஆசைப்படுகிறேன். ஆனால், என் தந்தை கூலி வேலதான் பார்க்கிறார். அதனால், அரசாங்கம்தான் என்னை படிக்க வைக்க வேண்டும்" என்றார் கண்ணீர் பொங்க.
ராகுல் என்ற மாணவன் கூறுகையில் "அப்போது நான், ஆங்கில வழியில் 3வது படித்துக்கொண்டிருந்தேன். ஷூ, சாக்ஸ், டை எல்லாத் தையும் கழட்டிட்டு மேல கூட்டிப்போய் உட்கார வைத்துவிட்டு, கிரில் கதவப் பூட்டிட்டு ஆசிரியர்கள் கோயிலுக்குப் போய்ட்டாங்க. அப்போதுதான் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து சக மாணவ, மாணவிகள் கத்தி கூச்சலிட்டனர். நான் பெஞ்சுக்குக் கீழ புகுந்துவிட்டேன்.
புகைமூட்டத்தால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. வெளியில இருந்தவர்கள் வந்து காப்பாற்றினார்கள். பள்ளி நிர்வாகம் சரியாக இருந்திருந்தால் இதுபோல நடந்திருக்காது. நடந்த கொடுமைக்குக் காரணமா இருந்தவர்களுக்கெல்லாம் சரியான தண்டனை கிடைக்க வேண்டும். இதுபோல வேறு யாருக்கும் இனிமேல் நடக்கக் கூடாது" என்றார்.
விஜய் என்ற மாணவன் கூறுகையில், "தீ விபத்து நடந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் மறக்க முடியவில்லை. தீயணைப்பு வண்டி போகும் சத்தம் கேட்கும்போதெல்லாம் பள்ளி ஞாபகம்தான் வருது. தீ பிடித்தபோது, நான் பெஞ்சுக்குக் கீழ ஒளிந்துகொண்டேன். அப்புறம் என்னைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
கேஸ் நடந்தபோது, வக்கீலுங்க அப்படி ஒரு பள்ளியே கும்பகோணத்துல இல்லை. நீ பொய் சொல்றன்னுல்லாம் சொன்னாங்க. அவங்க புள்ள இப்படிப் பாதிக்கப்பட்டிருந்தா இப்படிக் கேட்பார்களா? எங்களைப் பேசவே விடல. நான் மட்டும் இல்ல. இதுல பாதிக்கப்பட்ட 18 பேரு உயிரோடதான் இருக்கோம். எல்லாருக்கும் ஒரு நியாயமான தீர்ப்பு வேணும். எங்க அப்பா கூலி வேலைதான் பார்க்கிறார். நான் படிக்க தேவையானத அரசாங்கம் செய்யணும். படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்" என்று கூறியுள்ளார்.