100 ரூபாய் மாமூல் கேட்டு டெம்போவை உடைத்த “சஸ்பெண்ட்” காவலர் கைது
சேலம்: சேலத்தில் நூறு ரூபாய் மாமூல் கேட்டு டெம்போவை சேதப்படுத்திய பணியிடைநீக்கத்தில் உள்ள போலீஸ் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவர் மினி டெம்போவில் ஊர் ஊராகச் சென்று வெங்காயம் விற்பனை செய்து வருகிறார். இந்த மினி டெம்போவை அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் ஓட்டிவந்தார்.
இந்த நிலையில் ஓமலூரில் இருந்து சின்ன திருப்பதி செல்லும் சாலையில் பெரும்பள்ளம் என்ற இடத்தில் புதன்கிழமை சேட்டு தனது டெம்போ ஆட்டோவில் வெங்காய வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் டெம்போவை வழிமறித்து தான் போலீஸ்காரர் என்றும், நூறு ரூபாய் மாமூல் கொடுக்கவேண்டும் என்றும் அந்த நபர் கேட்டு மிரட்டியுள்ளார். யாராக இருந்தாலும், பணம் கொடுக்க முடியாது என டெம்போ ஓட்டுநர் தினேஷ்குமார் கூறிவிட்டார்.
இதனால் கோபமடைந்த இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் அருகில் கிடந்த கல்லை எடுத்து டெம்போ வாகனத்தின் கண்ணாடியை உடைத்து ஆட்டோவை சேதப்படுத்தியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபரைப் பிடித்து வைத்துக்கொண்டு தீவட்டிப்பட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், பணம் கேட்டு மிரட்டிய நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர் ஓமலூர் அருகேயுள்ள கொங்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்றும், இவர் தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலையத்தில் வேலை செய்து வருவதாகவும், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் வேலை செய்வதாகவும் மாறி மாறி கூறியுள்ளார்.
தீவட்டிப்பட்டி போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த நபர் தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் வேலை செய்ததும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருவதும், அடிக்கடி மது போதையில் இதுபோன்று மாமூல் கேட்டு வசூல் செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.