தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதாலேயே எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை இல்லை: பத்திரிகையாளர்கள் கண்டனம்
தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதாலேயே எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை இல்லை என்று பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை : தனது அரசியல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அரசியல் பின்னணியை வைத்துக்கொண்டு, போலீஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து எஸ்.வி சேகர் தப்பித்து வருவதாக பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகவும், அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பாஜக பிரமுகரும், இயக்குநருமான எஸ்.வி சேகர் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அவரை கைது செய்ய போலீஸார் முயற்சி எடுத்த நிலையில், ஒரு வார காலத்திற்கு இடைக்கால முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துஇருந்தார்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கில் எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று பல பத்திரிகையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ராமதிலகம் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது பத்திரிகையாளர் தரப்பு வழக்கறிஞர் இளங்கோ தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
எஸ்.வி சேகர் மனு
மிகப்பெரிய குற்றம் இழைத்த எஸ்.வி சேகரை போலீஸார் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பதாகவும், இதுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.மேலும், தனக்கு வேறு ஒருவர் அனுப்பிய செய்தியையே பார்வார்டு செய்திருந்ததாகவும், எஸ்.வி சேகர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்த நிலையில், அந்த நபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இளங்கோ நீதிபதியிடம் முறையிட்டார்.
பெங்களூருவில் தலைமறைவு
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, எஸ்.வி சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் தலைமறைவாக இருக்கும் எஸ்.வி சேகர் எந்த நேரத்திலும் கைதாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.வி சேகர் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உடனடியாக கைது
இதுகுறித்து பெண் பத்திரிகையாளர் கவின் மலர் கூறுகையில், பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி சேகரை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் என்பதாலும், பாஜகவின் பின்புலம் இருப்பதாலுமே எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.