தற்கொலை செய்த 3 எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகளின் சிம் கார்டுகள் சிக்கின!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எஸ்விஎஸ் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த கிணற்றின் அருகே சிம் கார்டுகளைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதனால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
எஸ்.வி.எஸ். கல்லூரியில் நேச்சுரோபதி படிப்பு படித்து வந்த பிரியங்கா, சரண்யா, மோனிஷா ஆகிய மூன்று மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தனர். மூவரின் உடல்களும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பான கடிதமும் சிக்கியது.
இதையடுத்து கல்லூரி தாளாளர் வாசுகி, முதல்வர் கலாநிதி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரி அமைந்துள்ள பங்காரம் கிராமத்தில் ஜேசிபி டிரைவர் கார்த்தி மற்றும் மாணவர் ஒருவரிடம் நடத்திய விசாரணையின்போது மாணவிகளின் செல்போன்களை அவர்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீஸார் மேலும் விசாரித்தபோது அதில் இருந்தசிம் கார்டுகளை கிணற்றின் அருகே போட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் அங்கு தேடுதல்வேட்டை நடத்தி 3 சிம் கார்டுகளையும் மீட்டனர். அதில் கடைசியாக மாணவிகளுடன் பேசியது யார் என்பது உள்ளிட்ட விவரம் இருக்கும் என்பதால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.