தீவிரமடைகிறது தென் மேற்குப் பருவ மழை.. இன்று பல இடங்களில் 'ஜில் ஜில்' மழை பெய்யலாமாம்!
சென்னை: தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அது கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்து மக்களைக் குளிர்வித்தது.
இந்த நிலையில் தற்போது, தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும், சென்னையை பொறுத்தவரையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று பெரும்பாலான இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூர் மாவட்டம் மூலனூரில் 15 செ.மீ அளவுக்கு பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அதேபோல திருச்சி, திருப்பத்தூர், வாடிப்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.