சுவாதி வழக்கு: சென்னை போலீசாருக்கு முதல்வர் ஜெ., பாராட்டு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த சென்னை பெருநகர காவல்துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜெயலலிதா, சிறப்பு வாய்ந்த காவல்துறை என்பதை தமிழக காவல்துறை மீண்டும் நிரூபித்துள்ளது என்று பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதியன்று காலை மின்சார ரயிலுக்காக காத்திருந்தபோது சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் சுவாதி, மர்ம இளைஞரால் படுகொலை செய்யப்பட்டார். காலை 6.30 மணி அளவில் நிகழ்ந்த இக் கொலை, பொது மக்கள், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை பெருநகர காவல்துறையினர் 8 தனிப்படை அமைத்து பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கின் குற்றவாளி என கருதப்படும் ராம்குமார் என்ற இளைஞரை அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் வைத்து போலீசார், சுற்றி வளைத்து பிடித்தனர்.
ராம்குமாரை போலீசார் பிடிக்க சென்ற போது, அவர் தற்கொலை முயற்சி செய்ததால், அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த சென்னை பெருநகர காவல்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜெயலலிதா, சிறப்பு வாய்ந்த காவல்துறை என்பதை தமிழக காவல்துறை மீண்டும் நிரூபித்துள்ளது என்றும், குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த காவல்துறைக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ததற்கு முதல்வர் ஜெயலலிதா காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications