ராம்குமாருடன் மேன்ஷனில் தங்கிய சொந்த ஊர்க்காரர்கள் எங்கே? போலீஸ் வலைவீச்சு
சென்னை: பெண் இன்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தங்கியிருந்த, சூளைமேடு மேன்சனில் அவருடன் தங்கியிருந்த சுற்றுவட்டார ஊர்க்காரர்களிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலைவேளையில், இன்ஜினியர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த இளைஞரான ராம்குமார் கடந்த 1ம் தேதி செங்கோட்டை அருகேயுள்ள அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஒருதலை காதல்
சூளைமேட்டில் உள்ள ஏ.எஸ் மேன்சனில் ராம்குமார் தங்கியிருந்தார். அருகேயுள்ள கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுவாதி ரயில் நிலையம் செல்லும்போது அவரை தொடர்ந்து சென்று பேச்சுகொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் காதலை வெளிப்படுத்த அதை, சுவாதி ஏற்க மறுக்க ராம்குமார் அவரை வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.

போட்டோ ஆதாரம்
சிசிடிவி காமிரா காட்சியில் கொலையாளி ஓடும் படத்தை வைத்து போலீசார் அதை ஜூம் செய்து பெரிதுபடுத்தி சூளைமேடு பகுதிகளில் பொதுமக்களிடம் விசாரித்து வந்தனர். ஏ.எஸ் மேன்சன் காவலாளி கோபால் அந்த படத்தை பார்த்து, தங்கள் மேன்சனில் தங்கியிருந்த ராம்குமாரை போல இருப்பதாக கூறினார்.

தலைமறைவு
காவலாளி கொடுத்த தகவல் வழக்கில் திருப்பத்தை தந்தது. ராம்குமார், கொலை நடந்த பிறகு தலைமறைவாகி சொந்த ஊர் சென்றது மேற்தொடர்ந்த விசாரணைகளில் தெரியவந்தது. இதன்பிறகே கைது படலம் அரங்கேறியது.

தொடர்பில்லை
ராம்குமார் கைதுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை கமிஷனர் ராஜேந்திரன், இந்த கொலையில் ராம்குமாருக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாகவும், உடந்தையாக யாரும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

சந்தேகங்கள்
இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ராம்குமாரின் ஜாமீன் மனு விசாரணைக்காக ஆஜராகிய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, போலீசார் விசாரணை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
ராம்குமாரை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ராமராஜ், இந்த கொலையில் வேறு சிலருக்கு தொடர்புள்ளதாக சந்தேகம் கிளப்பினார்.

கூடுதல் விசாரணை
இதனால் சுவாதி கொலை வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டது. வழக்கில் போலீசாருக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே, கொலை தொடர்பாக கூடுதல் விசாரணையில் குதிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

பேஸ்புக் பழக்கம்
ராம்குமாருக்கும், சுவாதிக்கும் பேஸ்புக்கில் பழக்கம் இருந்துள்ளதையும், அவர்கள் என்னவெல்லாம் சாட் செய்தனர் என்பதையும் பக்காவாக தெரிந்து வைத்துள்ளது காவல்துறை. இருப்பினும், மேன்சனில் சேர ராம்குமாருக்கு, யார் சிபாரிசு செய்தார்கள்? என்று போலீஸார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

சிபாரிசு
ராம்குமார் தங்கி அறை அருகேயே அவரது உறவினர் ஒருவர் தங்கி இருக்கிறார். அவரது சிபாரிசின் மூலமாகவே ராம்குமார் இந்த மேன்சனுக்கு வந்து தங்கியுள்ளார். இதுதவிர ராம்குமாரின் சொந்த ஊரான செங்கோட்டையின் அக்கம் பக்கம் உள்ள ஊர்களை சேர்ந்த 7 பேர் அங்கே தங்கியிருந்தது தெரியவந்தது.

வலைவீச்சு
ராம்குமாருக்கு சிபாரிசு செய்தவர்களின் பின்புலத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். தற்போது அவர்களில் சிலர் மேன்ஷனில் இல்லை என்று கூறப்படுகிறது. ராம்குமாரை அவர்கள் தூண்டிவிட்டனரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறாரகள்.












Click it and Unblock the Notifications