சுவாதி கொலையாளி தங்கியிருந்த மேன்சனில் போலீஸ் துருவி துருவி விசாரணை- 500 பேர் தவிப்பு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் போலீசிடம் சிக்கியுள்ள ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷன் அறையில் மாநகர காவல்துறை இணை ஆணையர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். மேன்ஷனில் பணியாற்றும் ஊழியர்களிடம் ஆணையர் மனோகரன் விசாரணை நடத்தியதில் முக்கிய தகவல்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேன்சனில் தங்கியிருந்தவர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதால் 500க்கும் மேற்பட்டவர்கள் தவித்து வருகின்றனர்.
கடந்த 24ம் தேதி வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் செங்கல்பட்டு ரயிலுக்காக காலை 6.30 மணிக்கு காத்திருந்த சுவாதி மர்ம நபர் ஒருவரால் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வெளியே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில், வாலிபர் ஒருவர் காலை 6.30 மணிக்கு ரயில் நிலையம் உள்ளே செல்வதும் 6.40க்கு வெளியே செல்வதும் தெரிந்தது. மேலும், அவர் வேக வேகமாக நடப்பதும், சுவர் ஏறி ஓடுவது போன்ற காட்சியும் பதிவாகியிருந்தது.
அடுத்தடுத்து கிடைத்த சிசிடிவி காமிரா பதிவிலும் அந்த நேரத்தில் அதே நபர் நடந்து செல்லும் காட்சிகள் கிடைக்கவே, கொலையாளி இவர்தான் என்பதை உறுதி செய்து தேடி வந்தனர். ரயில்வே காவல்துறையிடம் இருந்த வழக்கு சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

சுவாதியின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கிய போலீஸ், கொலையாளியை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைத்து சல்லடை போட்டு தேடியது. கொலையாளி என சந்தேகப்படும் நபரின் தெளிவான புகைப்படம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. போட்டோவில் இருப்பவர் பற்றி தகவல் தெரிவிக்க வசதியாக போலீஸ் அதிகாரிகள் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.
சென்னை சூளைமேடு மேன்சனில் கைப்பற்றப்பட்ட சுவாதி கொலையாளி ராம்குமார் குறித்த ஆவணம்
சென்னை சூளைமேடு மேன்சனில் கைப்பற்றப்பட்ட சுவாதி கொலையாளி ராம்குமார் குறித்த ஆவணம் https://t.co/Qb2A0TJ6Pw pic.twitter.com/0BQ85Qzh3l
— Oneindia Tamil (@thatsTamil) July 2, 2016
தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் போலீசாருக்கும் சவால் விடும் வகையில் குற்றவாளி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். சூளைமேடு பகுதியில் வீடு வீடாக ராம்குமாரின் புகைப்படத்தை வைத்து தேடியதில் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதில் எஸ்.வி மேன்சனில் தங்கியிருந்த நபர் கடந்த ஒருவாரமாக வருவதில்லை என்று காவலாளி கூறவே, அதனடிப்படையில் ராம்குமார் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர்.
அந்த நபர் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார், 22 என்பது தெரியவந்தது. சென்னை தனிப்படை போலீசார் 8 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை 1 மணியளவில் அவரது வீட்டில் வைத்து மடக்கியுள்ளனர். போலீசாரை கண்ட அதிர்ச்சியில் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு அவர் முயன்றார்.
அவரை மீட்டு போலீசார் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் மயக்கநிலையில் இருப்பதால் 24 மணிநேரம் கழித்தே பேச முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டில் சுவாதியின் வீட்டின் அருகே விடுதியில் தங்கியிருந்து வேலை தேடி வந்தார் ராம்குமார். இந்நிலையில், சூளைமேடு வழியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வரும் சுவாதியை ராம்குமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
சுவாதி தனியாக செல்லும் போது அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சுவாதி மறுத்ததாக தெரிகிறது. எனினும் ஒருதலை காதலால் ராம்குமார், சுவாதி பின்னால் சுற்றியுள்ளார். சம்பவத்தன்றும், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் வைத்து சுவாதியிடம் அவர் காதல் குறித்து பேசியுள்ளார். சுவாதி மறுக்கவே, ஆத்திரமடைந்த ராம்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவாதியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

சூளைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷன் காவலாளி அளித்த தகவலின் அடிப்படையில் சென்னையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார், நள்ளிரவு 1 மணியளவில் அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர்.
இதனை பார்த்த ராம்குமாரின் தாத்தா வீட்டின் கதவை அடைத்து குரல் எழுப்பியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ராம்குமார் கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்துள்ளார். இதனை தொடர்ந்து வீட்டிற்குள் தடாலடியாக புகுந்த போலீசார் ராம்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மீனாட்சிபுரத்தில் இருந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் ராம்குமாருக்கு கழுத்து பகுதியில் 16 தையல் போடப்பட்டுள்ளது. பின்னர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு போலீசார் அவரை கொண்டு வந்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.
தொண்டையில் 2 செமீ ஆழத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ராம்குமாருடன் பேச போலீசுக்கு மருத்துவர்கள் தடை விதித்துள்ளனர். 24 மணி நேரத்துக்கு ராம்குமாருடன் பேசக்கூடாது என மருத்துவர்கள் தடையால் விசாரணை தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சூளைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷன் அறையில் மாநகர காவல்துறை இணை ஆணையர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். மேன்ஷனில் பணியாற்றும் ஊழியர்களிடம் ஆணையர் மனோகரன் விசாரணை நடத்தியுள்ளார். ராம்குமாருடன் தங்கியிருந்த நண்பரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாயமாகியியுள்ளதால் அவரைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேன்சனில் யார் யார் தங்கியிருந்தனர், அவர்களின் முகவரி பற்றி விசாரணை நடத்தி வரும் போலீஸ், சுவாதி கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேன்சனில் இருந்து மற்றவர்கள் வெளியேற போலீஸ் தடை விதிக்கப்பட்டுள்ளதால் 500க்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். காலை முதலே போலீஸ் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சூளைமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications