சுவாதி கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை தரவேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை: சுவாதியை கொடூரமா கொலை செய்த நபரை கைது செய்ய வேண்டும். அவரை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சக்கட்ட தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டு 7 நாட்கள் ஆகியும் இன்னும் அவரை கொலை செய்த குற்றவாளியை காவல் துறையினர் கண்டுபிடிக்காமல் இருப்பது சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காவல் துறையினர் தங்களுடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி குறுகிய காலக்கெடுவிற்குள் இந்தக் கொடூரமான கொலையை செய்த நபரை கைது செய்ய வேண்டும். அவரை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சக்கட்ட தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
சுவாதியின் கொலை சம்பந்தமாக தவறான தகவல்களைப் பரப்பும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு காவல் துறையினர் உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற தவறான செய்திகள் இனி வரும் காலங்களில் வெளிவராமல் தடுக்க முடியும்.
பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் காவல் துறையினர் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும். மத்திய அரசு நம் நாட்டில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும், மாநில அரசு தமிழகத்தில் பொது மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களிலும் சிசி டிவி கேமராவைப் பொருத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.