சுவாதி கொலையில் எனது மகன் குற்றவாளி இல்லை... ராம்குமாரின் தந்தை 'திட்டவட்டம்'
நெல்லை: சுவாதி கொலை வழக்கில் எனது மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை என ராம்குமாரின் தந்தை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த மாதம் 24-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர்.

அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தந்தை பரமசிவம் இன்று செங்கோட்டையில் வழக்கறிஞர்கள் ராம்ராஜ், மார்க்ஸ் ரவீந்திரநாத் முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த கொலைக்கும் எனது மகன் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வழக்கில் போலீசார் எனது மகனை குற்றவாளியாக்கி விட்டனர்.
உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி தமிழக முதல்வருக்கும், உள்துறை செயலாளர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பபியுள்ளேன்.
சுவாதி கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பரமசிவம் கூறினார்.












Click it and Unblock the Notifications