சுவாதி கொலை வழக்கில் ஏகப்பட்ட சந்தேகங்கள்.. சிபிஐ விசாரணைதான் தீர்வு- ராம்குமார் வக்கீல்கள்
நெல்லை: சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில் இருந்தே ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. இதனை முழுமையாக ஆராய வேண்டும். இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் ராம்ராஜ், மார்க்ஸ் ரவீந்திரநாத், தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த மாதம் 24-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முற்போக்கு வழக்கறிஞர்கள் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ராம்ராஜ் புழல் சிறைக்கு சென்று ராம்குமாரை சந்தித்தார். அவர் வழக்கு தொடர்பான தகவல்களை சேகரிக்க செங்கோட்டைக்கு நேற்று சென்றார். மேலும் மீனாட்சிபுரம் சென்று ராம்குமார் தொடர்புடைய தகவல்களை சேகரித்து வருகிறார். அவருடன் தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன், வக்கீல்கள் சிவராஜன், பிரபாகரன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் ராம்ராஜ், மார்க்ஸ் ரவீந்திரநாத் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில் இருந்தே ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. இதனை முழுமையாக ஆராய வேண்டும்.
ராம்குமார் தனக்கு பிலால் சித்திக்கை தெரியாது என்று என்னிடம் தெரிவித்தார். மேலும் அவரிடம் போலீசார் 5 வெள்ளை காகிதங்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். அதைத்தான் அவன் என்னிடம் சொன்னான்.
பிலால் சித்திக், சுவாதிக்கும் ஏற்கனவே தொடர்பு உள்ளது. பதிவு திருமணம் கூட நடந்து விட்டதாகவும், இந்த விஷயம் அவர்களது வீட்டுக்கு தெரிந்து பிரச்சனை ஏற்பட்டதாகவும், பெங்களூரில் பிரச்சனை ஏற்பட்டுத்தான் அவரை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
சுவாதி கொலை நடந்த ஒருவாரத்திற்கு முன்பு அவரை தாக்கிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தவில்லை. இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். கொலையாளி மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளார்.
இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன. இதில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுதான் சிபிஐ விசாரணை கேட்கிறோம். அப்போதுதான் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். சுவாதிக்கு ராம்குமாருக்கும் முகநூல் நட்பு கிடையாது. சுவாதி கொலைக்குப் பின்னர் தான் ராம்குமார் சுவாதி முகநூலை சர்ச் செய்து பார்த்துள்ளார்.
பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரிக்காமல் ஒரே கோணத்தில் வழக்கை விசாரணை நடத்தியுள்ளனர். ராம் குமார் அம்மாவிடம் போலீசார் நீங்கள் முஸ்லிமாக மாறிவிட்டீர்களா என்றும், நோன்பு இருக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். குழப்பங்களால் நிரம்பியுள்ள இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் தீர்வு கிடைக்கும்.
ராம்குமாருக்கு மனநல மருத்துவ சிகிச்சை அளித்ததாக கூறுகின்றனர். சிறைச்சாலையில் வைத்து மன நலத்திற்கு மருத்துவம் பார்க்க முடியாது. ஆகவே அவரை மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications