2 மாதமாக மர்ம நபர் பின் தொடர்ந்ததாக என்னிடம் கூறினார் சுவாதி... நண்பர் முகம்மது பிலால்
சென்னை: சுவாதி குறித்தும் அவரது குணாதிசயம் குறித்தும் அவரது நண்பரான முகம்மது பிலால் என்பவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சுவாதியைக் கொன்றதாக கூறி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தேவையில்லாம் பேஸ்புக்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் பிலால் என்ற பெயரில் அவருக்கு உண்மையில் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் சுவாதி படுகொலை குறித்து உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
முகம்மது பிலால் என்ற அந்த நண்பர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர். இவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து முகம்மது பிலால் கூறுகையில், போலீஸார் எங்களிடமும் விசாரணை நடத்தினர். அந்த விசாரணைக்கு நானும், எனது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு அளித்தோம். கொலையாளி இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதற்காக போலீஸாருக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். சுவாதியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

சுவாதி எனக்கு நெருங்கிய தோழி. தன்னை பற்றியும், குடும்பத்தை பற்றியும் விவரமாக என்னிடம் எடுத்துரைப்பார். தன்னை ஒருவர் சுமார் 2 மாதமாக மாலை நேரங்களில் பின் தொடர்வதாக சுவாதி என்னிடம் தெரிவித்தார். ஒருமுறை தான் பயணம் செய்த ரயில் பெட்டியில் வந்து தனது அலுவலகத்தை நோட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சுவாதி தைரியமான பெண். எதையும் நேருக்கு நேர் சந்திப்பதில் வலிமையானவர். நம்பிக்கை கொண்டவர். சுவாதியை கொன்ற கொலையாளி ஒரு கோழை, முன்பக்கமாக தாக்கி இருந்தால் சுவாதி நிலைமையை சமாளித்து தடுத்து இருப்பார்.
சுவாதி கொல்லப்பட்ட செய்தி அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். எனக்கு ஆறுதல் அளித்து கொலையாளியை கண்டு பிடிக்க உதவிடுமாறு எனது உறவினர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஜூன் 24-ந்தேதி அன்று நான் சுவாதிக்கு போன் செய்தேன். ஒரு ரிங் ஆனதும் கால் கட்டாகி விட்டது. இந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்தேன்.
பெண்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும். அவர்களை கட்டுப்படுத்த கூடாது. ஆனால் பெண்களுக்கு எதிராக இது மாதிரியான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த தண்டனை பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.
சுவாதி மிகவும் கலகலப்பானவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அவர் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். யாரும் சோகமாக இருந்தால் அவருக்குப் பிடிக்காது. அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் சுவாதி. மிக மிக நல்ல பெண்.
சரியாண கோணத்தில் இந்த வழக்கின் விசாரணை சென்றதால் கொலையாளி விரைவில் சிக்கியுள்ளார். இதற்காக போலீஸாருக்கு நன்றி என்று கூறியுள்ளார் முகம்மது பிலால்.












Click it and Unblock the Notifications