வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்: 3 லட்சம் 'டாமி புளூ' மாத்திரைகள் தயார் நிலையில்..
கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டு உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை பீளமேடு, சாய்பாபா காலனியை சேர்ந்த 8 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியை சேர்ந்த 46 வயது பெண், கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த 55 வயது பெண், கோவை காந்திபுரத்தை சேர்ந்த 33 வயது பெண் ஆகியோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சலுக்குரிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், காலநிலை மாறுபாட்டால் தான் பன்றிக்காய்ச்சல் ஏற்படுகிறது.
பன்றிக்காய்ச்சலும் மற்ற காய்ச்சல் போன்றதுதான். உரிய சிகிச்சை பெற்றால் குணமாகிவிடும். ரத்தக்கொதிப்பு, இருதய கோளாறு, நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் டாக்டர்களின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
காய்ச்சல் பரவாமல் இருக்க கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இருமல் வரும்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. அதனை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றார்.
3 லட்சம் டாமி புளு மாத்திரைகள்:
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து சுகாதாரத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பன்றி காய்ச்சலை கண்டறிவதற்கு கிங் மருத்துவ நிலையம் உட்பட 6 ஆய்வு மையங்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஆய்வு மையமும் செயல்படுகின்றன. இது தவிர 13 தனியார் ஆய்வு மையங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக சிறப்பு வார்டுகள் சென்னை தண்டையார் பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசு மருத்துவ நிலையங்களில் 3 லட்சம் டாமி புளு மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல் குறித்து 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
044-24350496, 24334811, 94443-40496, 93614-82899 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 104 சேவையையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications