அழகிரியை நீக்கியது போன வாரம்... ‘ஸ்டாலினுக்கு பாதுகாப்பு’ கடிதம் எழுதியது போன மாதம்: டி.ஆர்.பாலு
சென்னை: ஸ்டாலினின் பாதுகாப்பை அதிகரிக்க கோரும் கடிதம் டிசம்பரில் எழுதப்பட்டது, ஆனால் அது தற்போது திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ளது போல் செய்திகள் வெளிவருகிறது என விளக்கமளித்துள்ளார் டி.ஆர். பாலு.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அழகிரி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கருணாநிதி அளித்த பேட்டியைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மு.க. அழகிரியின் உருவ பொம்மையை ஸ்டாலின் ஆதவாளர்கள் எரித்தனர்.

இந்நிலையில், நேற்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தில் "ஸ்டாலினுக்கு வழங்கப்படும் மத்திய பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.
ஆனால், அது தவறு, ஸ்டாலின் பாதுகாப்புக் கோரி எழுதப்பட்ட கடிதம் கடந்த டிசம்பரில் எழுதப்பட்டது என தமிழ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு.
மேலும், இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் என்ற தகுதியின் அடிப்படையில் நான்தான் பிரதமருக்குக் கடந்த டிசம்பரில் கடிதம் எழுதினேன். கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அக்கடிதத்தை நான் பிரதமரிடம் அளித்தேன்.
ஆனால், தற்போதைய நிகழ்வுகளுடன் எனது கடிதத்தை தொடர்புபடுத்தி அதை திமுக தலைவர் எழுதியதாக செய்திகள் வெளி வருகிறது. அதில் உண்மையில்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். மு.க. ஸ்டாலின் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுகவின் நட்சத்திர பிரசார நாயகனாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
தமிழக காவல்துறையினரால் ஸ்டாலினின் பாதுகாப்பை எந்த அளவுக்கு உறுதிப்படுத்த முடியும் என்பது கேள்விக்குரியே. காரணம், 2006-ஆம் ஆண்டிலேயே மதுரை ரயில் நிலையம் அருகே ஸ்டாலினை கத்தியால் தாக்க வந்த நபரை அப்போது அவருக்கு பாதுகாப்பு வழங்கிய மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர்தான் காப்பாற்றினார். அப்போது தமிழக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே நிலை வரவிருக்கும் தேர்தலில் வரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் பிரதமருக்கு நான் கடிதம் அனுப்பினேன். இதுதான் உண்மையான நிலவரம்' என இவ்வாறு தெரிவித்துள்ளார் டி.ஆர். பாலு.












Click it and Unblock the Notifications