டி.ராஜேந்தர் வீட்டில் வெடிகுண்டு வெடித்ததா?... போன் தகவலால் பரபரப்பு
சென்னை: சென்னை போரூரில் உள்ள டி.ராஜேந்தரின் பங்களாவில் வெடிகுண்டு வெடித்ததாக மர்ம மனிதர் ஒருவர் தொலைபேசியில் கொடுத்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவிற்கு நெருக்கடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் டி.ராஜேந்தருக்கு சொந்தமான போரூர் பங்களாவில் வெடிகுண்டு வெடித்துள்ளதாக தொலைபேசி அழைப்பு வந்தது.
இதனால் மதுரவாயல் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியிருக்கின்றனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லையாம்.
டி.ராஜேந்தர்
இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு சொந்தமான பங்களா ஒன்று சென்னை போரூரில் உள்ளது. இந்தப் பங்களாவை படப்பிடிப்புகள் நடத்துவதற்கு டி.ராஜேந்தர் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணி அளவில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், ‘‘போரூரில் உள்ள டி.ராஜேந்தரின் பங்களாவில் குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது'' என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
வெடிகுண்டு புரளி
இதுபற்றி 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் உடனடியாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மதுரவாயல் போலீசார் டி.ராஜேந்தர் பங்களாவிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அங்கு எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. முடிவில் அது புரளி என்ற முடிவிற்கு போலீசார் வந்தனர்.
மிரட்டல் விடுத்தது யார்?
இதனால் மிரட்டல் விடுத்தவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். அந்த நம்பரைக் கண்டுபிடித்து போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. ஆனால் அவர் உடனடியாக செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டார்.
சிக்கல்
அந்தப் பெண் ஆண் குரலில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்ற முடிவிற்கு போலீசார் வந்துள்ளனர். ஆனால் தொடர்ந்து அந்த மொபைல் ஸ்விட்ச் ஆப்பில் இருப்பதால் அவர் எதற்காக இந்த மிரட்டலை விடுத்தார் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவுவதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
பீப் பாடல்
மற்றொருபுறம் சிம்புவின் பீப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்துடன் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதா? என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.