மத்திய அரசு போடுவது இரட்டை வேடம்.. இந்த தப்புக்கு மக்கள் கட்ட வேண்டும் லாடம்.. டி.ஆர். ஆவேசம்
லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் தனது வழக்கமான அடுக்குமொழியில் உணர்ச்சி பொங்க மத்திய அரசை வறுத்தெடுத்து பேட்டியளித்தார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு இன்று மாலை 5 மணி முதல் 10 நிமிடங்கள் தனது வீட்டு முன்பாக கை கட்டி கருப்பு சட்டை அணிந்து மவுன போராட்டம் நடத்தினார். ஆங்காங்கு இதேபோல மக்களும் போராட்டத்தில் ஈடுபட அவர் அழைப்புவிடுத்தார்.
இதனிடையே சிம்புவிற்கு ஆதரவு தெரிவித்து அவரது இல்லத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் குவிந்தனர்.
போராட்டத்திற்கு பிறகு சிம்பு பேட்டியை தவிர்த்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். அவரது தந்தையும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் தனது வழக்கமான அடுக்குமொழியில் உணர்ச்சி பொங்க பேட்டியளித்தார். அவர் கூறியது:
தீர்ப்பில் ஏற்படுகிறது தாமதம். இதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள் பாடம். மத்திய அரசு போடுவது இரட்டை வேடம். இந்த தப்பு தண்டாவுக்கு எதிர்காலத்தில் தமிழக மக்கள் கட்ட வேண்டும் லாடம். இப்படி இருந்தால்தான் ஒதுங்காமல் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் வேதம். தமிழ் கடவுள் முருகனை கும்பிட்டு ஏற்றுவோம் சூடம்.
தமிழர்களே நம்மிடம் இருப்பது லட்சியம். நாம் வெற்றி பெருவது நிச்சயம். திரட்டுவோம் தமிழர் படை. மத்திய அரசு சொல்ல வேண்டும் விடை. இறங்க மாட்டோம் இறங்குனா உறங்க மாட்டேம். இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார். மேலும், 2017ல் தீவிர அரசியலில் இறங்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.