உலகம் கேட்கிறது, ஊடகம் கேட்கிறது, வாட்ஸ் ஆப் கேக்குது, பேஸ்புக் கேக்குது...டி.ஆர். அட்டாக்!
சென்னை: சிம்பு பிரச்சினையை அன்று ஊதிப் பெரிதாக்கிய பெண்கள் அமைப்பு இப்போது சுவாதி வழக்கில் எங்கே போனது என்று உலகம் கேட்கிறது, ஊடகம் கேட்கிறது, பேஸ்புக் கேட்கிறது, வாட்ஸ் ஆப் கேட்கிறது என்று இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் கேட்டுள்ளார்.
ஆர்.கே.நகரில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் விழாவில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது சிம்பு விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கிய பெண்கள் அமைப்பு இப்போது சுவாதி படுகொலை வழக்கில் எங்கே போனது என்று கோபமாக கேட்டார் டி.ராஜேந்தர். அவர் பேசுகையில், நடிகர் சிம்பு பிரச்சினையை பெரிதாக்கிய அமைப்புகள், இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் குரல் எழுப்பாதது ஏன். ஒரு சின்ன பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்கியவர்கள், சுவாதி படுகொலை வழக்கில் பெண்கள் அமைப்பு எங்கே போனது என்று ஊர் கேட்கிறது, உலகம் கேட்கிறது, ஊடகம் கேட்கிறது, பொதுமக்கள் கேட்கிறார்கள். வாட்ஸ் அப் கேட்கிறது. பேஸ்புக் கேட்கிறது.
எங்கே போனார்கள் அவர்கள். இந்த கொலைக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்லியே ஆக வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் லட்சிய திமுக தனித்து போட்டியிடும் என்றார் டி.ராஜேந்தர்.