ஆர்.கே.நகரை இந்தியாவின் முதன்மை தொகுதியாக மாற்றுவேன்.. டிடிவி தினகரன் உறுதி!
ஆர்.கே.நகர் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியை இந்தியாவின் முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்று அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைதேர்தல் நடக்கவுள்ளது. இந்த இடைதேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, தேமுதிக, பாஜக, சிபிஎம் வேட்பாளர்கள் என பலமுனை போட்டி நிலவும் ஆர்.கே நகரில் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரனும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த வேட்பாளரான டிடிவி தினகரனுக்கு வீடு வீடுகாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இன்றைய வாக்கு சேகரிப்பின் போது அவர் பேசுகையில், தேர்தல் வாக்குறுதிப்படி விண்ணப்பித்த அனைவருக்கும் 500 சதுர அடியில் வீடு வழங்கப்படும். இலவச வீடு வழங்குவதற்கான நிதி ஆதாரம் பெறப்பட்டுவிட்டது எனக் கூறினார்.
ஆர்.கே.நகரில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஓபிஎஸ் அணியினர் ஈடுபடுதவதாகவும், பணம் கொடுத்து வாக்குகள் பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் தொப்பி போட்டவர்கள் எல்லாம் எனது அணியை சேர்ந்தவர்கள் ஆகிவிடமுடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஆர்.கே.நகர் தொகுதியை இந்தியாவின் முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்றும் 4 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றும் தினகரன் கூறினார்.