இலங்கை சிறைகளில் உள்ள 78 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை சிறைகளில் உள்ள 78 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 6 கைது சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து 12-10-2015 அன்று 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 24 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்றுள்ளனர்.
இதுவரை மொத்தம் 78 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 38 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தொடர்ந்து கைது செய்து துன்புறுத்தும் நடவடிக்கையானது, தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பறிக்கும் செயல். இந்த செயலை இந்தியா அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
எனவே, சமீபத்தில் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் உள்பட இலங்கை சிறைகளில் உள்ள 78 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications