ஆப்கனில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் ப்ரேம்குமார் என்பவர் மர்மநபர்களால் கடத்தப்பட்டார். அங்கு அவர் பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் சேவையில் ஈடுபட்டதாகவும், இளைஞர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர் கடத்தப் பட்டதாக சந்தேகிக்கப் படுகிறது.
பாதிரியார் கைது தொடர்பாக நேற்று ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சிஸ் பிரேம்குமார். கொடைக்கானல் செண்பகனூர் கத்தோலிக்க இறையியல் கல்லூரியில் படிப்பை முடித்த இவர், இத்தாலியில் ரோம் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜேசு சபை புலம் பெயர்ந்தோர் அமைப்பு என்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, அதன் இயக்குனராகப் பணியாற்றி வந்தார். அந்த நிறுவனம் சார்பில் 2012-ம் ஆண்டிலிருந்து, ஆப்கானிஸ்தானின் ஹெர்ட் நகரில் தங்கியிருந்து தீவிரவாத போரினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சமூகப் பணிகளிலே ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் தலீபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் குழுவில் இளைஞர்கள் சேருவதைத் தடுக்கும் முயற்சியில் இவர் நடவடிக்கை எடுத்ததால்தான், தீவிரவாதிகள் இவரைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் கடத்தப்பட்டதை அறிந்த அவருடைய தந்தை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, பாதிரியார் பிரேம் குமாரை மீட்டுத் தரவேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.
கிறிஸ்தவர்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபடும் நண்பர் இனிகோ இருதயராஜ் இதே பிரச்சினைக்காக ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கவிருக்கிறார். இந்த நிலையில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, சிவகங்கையை சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று மத்திய அரசையும், குறிப்பாக பிரதமரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.