உடனடியாக தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசுங்கள்.. வைகோ கோரிக்கை
சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களின்,தொழிற்சங்கத் தலைவர்களை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் அழைத்துப் பேசவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒரு இலட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தையின் மூலம் இவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும். சென்ற 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நடைபெறாமல், கடந்த 16 மாதங்களாக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கிடைக்காமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேச்சு வார்த்தையின் மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இதரப் பலன்களும் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள எம்.எல்.எப். சங்கம் உட்பட 11 சங்கங்களைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் நிர்வாகத்திற்கு வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அதன் மீது 26.12.2014 அன்று தொழிலாளர் துறை அதிகாரியின் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று 27.12.2014 தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூகமான தீர்வு கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில்தான் அனைத்துத் தொழிற்சங்கங்களும் 29 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய அறிவிப்பு செய்துள்ளன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நெருங்கி வரும் வேளையில் தொழிலாளர்களின் போராட்டத்தினால், தமிழக மக்களுக்கு குறிப்பாக பேருந்து பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமங்களையும், இன்னல்களையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு அனைத்துத் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு ஏற்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications