போதும் கண்ணாமூச்சி ஆட்டம்.. மீனவர்களை விடுவித்தால்தான் பேச்சு.. இலங்கைக்கு தமிழக அரசு 'வார்னிங்'!!
ராமேஸ்வரம்: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு நேற்று பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும் 54 மீனவர்களும் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டால்தான் சென்னையில் தமிழகம்- இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்கள் கடந்த 21-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும் வருகின்ற 27-ந் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து 33 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.
அவர்களை வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இலங்கை மீனவர்கள் குழு சென்னை வந்துள்ளது.
இப்பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் தமிழக மீனவர்களை கைது செய்வது எப்படி சரியாகும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியிருந்தார். இதனிடையே தமிழக-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதை முன்னிட்டு இலங்கை சிறைகளில் உள்ள 54 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு நேற்று பரிந்துரை செய்தது.
இதனிடையே 54 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டால்தான் சென்னையில் இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications