குஷ்பு, நக்மா, இளங்கோவன் உருவபொம்மைகளை எரித்த தமிழர் முன்னேற்ற படையினர் கைது
சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி குஷ்பு, நக்மா, இளங்கோவன் ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்த தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை கடற்படையால் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை தூதரக அதிகாரிகளை சிறை பிடிக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் நேற்று மதியம் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தலைமையில் ஏராளமானோர் குவிந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை கொச்சைப்படுத்தியதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் நக்மா ஆகியோரின் உருவபொம்மைகளை சாலையில் தீ வைத்து எரித்தனர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம் குறித்து வீரலட்சுமி கூறுகையில், தமிழர்களின் அரசியல் வரலாறு தெரியாதவர்கள் எல்லாம் இன்றைக்கு தமிழர்களை கொச்சையாக பேசக்கூடிய ஒரு நிலைக்கு நாம் வந்து விட்டோம். வட இந்திய நடிகைகள் தமிழர்களை கொச்சைப்படுத்துகிறார்கள். இதை நாம் பார்த்துக்கொண்டு இருப்பது அவமானமாக உள்ளது. இனியும் இதுபோன்று விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தி பேசினால் அந்த நடிகைகளின் வீடு முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.