தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் கட்டாயம் தமிழை படிக்கவேண்டும்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் சேரக்கூடிய மாணவர்கள் தமிழ்பாடத்தை முதல் பாடமாக எடுத்துப் படிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் மத்திய கல்வி வாரிய பள்ளிகள் ஏராளம் உள்ளன. இந்த பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 565 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தனியார் பள்ளிகள் ஆகும். 41 பள்ளிகள் கேந்திரவித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் பள்ளிகள் ஆகும்.
இந்த பள்ளிகளில் இப்போது தமிழ் தவிர மற்ற பாடங்கள் முதல் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
ஆனால் இனிமேல் தமிழை முதல் பாடமாக படிக்கவேண்டும். அது கட்டாயம் என்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாணையின்படி வருகிற கல்வி ஆண்டில் 2015-2016ம் ஆண்டில் முதல் வகுப்பில் சேரக்கூடிய மாணவ-மாணவிகள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும். அதுவும் முதல் பாடமாக படிக்க வேண்டும். அதே மாணவர் 2-வது வகுப்பிற்கு செல்லும் போதும் அப்படியே படிக்க வேண்டும்.
இப்போது 1-வது வகுப்பு முதல் 12-வது வகுப்பு வரை படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு பிரச்சினை இல்லை. அடுத்த கல்வி ஆண்டில் 1-வது வகுப்பில் சேரக்கூடிய மாணவ-மாணவிகள் கட்டாயம் தமிழ் பாடத்தை முதல் பாடமாக எடுத்துப்படிக்க வேண்டும். இது கட்டாயம். இப்படி படிப்படியாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் அமல்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications