சார்லி ஹெப்டோ பாணியில் தாக்குவோம்: முன்னணி தமிழ் நாளிதழுக்கு மிரட்டல் கடிதம்
சென்னை: சார்லி ஹெப்டோ பாணியில் தாக்கப் போவதாக முன்னணி தமிழ் நாளிதழ் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முன்னணி தமிழ் நாளிதழ் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் நேற்று - பாரீஸ் சார்லி ஹெப்டோ, நாளை - நீங்கள் தான் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
கடிதத்தில் இந்திய வரைபடம் இருந்தது. மேலும் அதில் ஒசாமா பின் லேடனின் புகைப்படமும் இப்படிக்கு அல் கொய்தா என்றும் எழுதப்பட்டிருந்தது. அரபு மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அது கையெழுத்தாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அஞ்சல் மூலம் வந்த அந்த கடிதத்தில் 3/10, உக்கடம், கோவை, தமிழ்நாடு, இந்தியாவைச் சேர்ந்த தி பேஸ் மொமன்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நாளிதழின் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அந்த கடிதம் எங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு பொய்யானதாக இருக்கலாம். இல்லை என்றால் யாராவது விஷமிகள் விளையாடலாம், இல்லை வேறு ஏதாவது திட்டமாகவும் இருக்கலாம். நமக்கு தெரியவில்லை. விசாரணை முடிந்த பிறகே எதுவும் கூற முடியும் என்றார்.