இலங்கை மீதான கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு எதிர்ப்பு- சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை!!
சென்னை: தமிழினப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை மீது சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும்; கலப்பு நீதிமன்ற விசாரணையைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக மே 17 இயக்கத்தின் சார்பாக நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில் இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்களை பட்டியலிட்டு சர்வதேச நீதிபதிகள், இலங்கை நீதிபதிகளைக் கொண்ட ஒரு கலப்பு நீதிமன்றம் இது தொடர்பாக விசாரிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இது உலகத் தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று மே 17 இயக்கத்தின் சார்பாக ஐ.நா. சபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் தி.க, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications