சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடி மருந்து பார்சல்
தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடி மருந்து பார்சல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. வெடி மருந்துகளுடன் கூடிய பார்சல் மற்றும் மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகாரையடுத்து மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் தமிழிசைக்கு அடிக்கடி கொலை மிரட்டல் கடிதங்கள், தொலைபேசிகள் வந்து கொண்டிருட்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்த மத்தியில் ஆளும் பாஜக அரசு தடைவிதித்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்
கடந்த வாரம் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த கடிதத்தில், மாட்டிறைச்சிக்கு எதிராக பேசுவதை தமிழிசை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரித்து வந்தனர்.

மர்ம நபர் மிரட்டல்
இந்த நிலையில், ஜூன் 2ஆம் தேதி தமிழிசைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தமிழிசை புகார் அளித்திருந்த நிலையில், மீண்டும் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை வீட்டிற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

போலீஸ் வழக்குப் பதிவு
இது குறித்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார், ஏற்கெனவே பாஜக தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவரும், தற்போது கடிதம் அனுப்பியவரும் ஒரே நபரா என்றும், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் யார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடி மருந்து பார்சல்
இன்று சென்னை தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. வெடி மருந்துகளுடன் கூடிய பார்சல் மற்றும் மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளார். புகாரையடுத்து மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications