முதல்வர் ஓ.பி.எஸ்.-மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு! கூடங்குளத்தில் இருந்து கூடுதல் மின்சாரம்!
சென்னை: தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சந்தித்து பேசினார். வடஇந்தியாவில் இருந்து தமிழகம் உட்பட தென்மாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டு வரும் வசதியை அதிகப்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூடங்குளம் 2வது அலகில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்காக மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தார். அவரை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் சாய்குமார், எரிசக்தித் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவர் சுதீப் ஜெயின் ஆகியோர் வரவேற்றனர்.
பகல் 12 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை பிற்பகல் 1.30 மணிவரை நீடித்தது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடனான இந்த சந்திப்பில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் கூறியதாவது:
தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு உச்சகட்டத்தில் இருந்த நிலையில் அதை மிகமிகக் குறைந்த அளவுக்கு கொண்டு வருவதற்காக உழைத்த ஜெயலலிதா மற்றும் அவரது குழுவுக்கு தலைமை தாங்கும் முதல்வர், மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு 9 மணி நேரம் மின்சாரம் கிடைப்பதாக வரும் தகவல்கள் மிகுந்த பாராட்டுக்கு உரியவை. இது ஒரு வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். தமிழகத்தில் மின்சாரத் துறைக்கு மிகுந்த ஒத்துழைப்பு தருவதற்கு மத்திய அரசு தன்னை அர்ப்பணித்துள்ளது.
தமிழக மக்களுக்காக சேவை செய்யும் நோக்கத்தில் பல புதிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்துக்கு உதவும் வகையில், வட இந்தியாவில் இருந்து தென் மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொண்டு வரும் வசதிகளை அதிகப்படுத்துவதற்காக, மத்திய அரசின் மின்சார கட்டமைப்புக் கழகம் 30 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது.
மத்திய அரசின் மின் கட்டமைப்பில் ரூ.30 ஆயிரம் கோடி செலவழிப்பதன் மூலம் தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும். இன்னும் 3 ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டம் முழுமை பெற்று விடும். தென்மாநிலங்களுக்கு, குறிப்பாக தென் கோடியில் அமைந்திருப்பதால் தமிழகத்துக்கு அதிக பயனை இந்தத் திட்டம் அளிக்கும்.
கூடங்குளத்தின் இரண்டாவது அலகில் தயாரிக்கப்படும் ஒதுக்கப்படாத மின்சாரத்தில் இருந்து 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதற்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன். இந்த அலகு வெகுவிரைவில் இயக்கத்துக்கு வரும்.
இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.












Click it and Unblock the Notifications