வலுவில்லாத அரசு.. முடிவு எடுக்க முடியாத அமைச்சர்கள்.. அதிமுகவை வெளுத்து வாங்கும் திருநாவுக்கரசர்!
தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது பாஜக ஆட்சி நடைபெறுகிறதா என கேட்கக்கூடிய அளவுக்கு ஆட்சி நடைபெறுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது பாஜக ஆட்சி நடைபெறுகிறதா என கேட்கக்கூடிய அளவுக்கு ஆட்சி நடைபெறுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு வலுவில்லாத அரசாங்கமாகவும், முடிவு எடுக்க முடியாத அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அமைப்பு தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர் திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அவரது பேசியதாவது, 'தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. இதை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

உட்கட்சி பிரச்சனை பிரதிபலிக்கிறது
தமிழகத்தை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பலம் இல்லாத அரசாங்கம் இருக்கிறது. உட்கட்சியில் இருக்கிற பிரச்சினை அமைச்சரவையில் பிரதிபலிக்கிறது.

வலுவில்லாத அரசாங்கம்
எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே வலுவில்லாத அரசாங்கமாகவும், முடிவு எடுக்க முடியாத அமைச்சராகவும் இருக்கிறார்கள். பா.ஜ.க. அரசால் நிர்பந்திக்கப்பட்டு செயல்படாத நிலையில் அ.தி.மு.க. அரசு இருக்கிறது.

எந்த ஆட்சி நடக்கிறது?
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறதா? அல்லது பா.ஜ.க. ஆட்சி நடக்கிறதா? என்று கேட்கக்கூடிய அளவுக்கு இன்றைய செயல்பாடு இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் தலைமை செயலகத்துக்கு சென்று ஆய்வு நடத்தும் சூழல் உருவாகி இருக்கிறது. இதுவே கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இப்படி நடந்தது கிடையாது.

அதிமுகவை உடைத்தது பாஜக
அமைச்சர்களை அச்சுறுத்துவது, கட்டுப்பாடுகளை விதிப்பது என மத்திய அரசின் செயல்பாடுகள் இருக்கிறது. அ.தி.மு.க.வை உடைத்து பார்த்தார்கள். அது தங்களுக்கு சாதகமாக பயன்படவில்லை. இதனால் இப்போது சேர்த்து பயன்படுத்த பார்க்கிறார்கள்.

எல்லா நாடகமும்
ஒட்டு மொத்தமாக பயமுறுத்தி பணிய வைத்து எதிர்காலத்தில் நடக்க இருக்கக்கூடிய ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் இவற்றிலே தமிழ்நாட்டில் கால் பதிப்பதற்காக பா.ஜ.க. அரசு எல்லா நாடகத்தையும் தமிழகத்தில் அரங்கேற்றுகிறது.

பாஜகவின் பினாமி அரசு
பா.ஜ.க.வின் பினாமி அரசாக செயல்படாமல், தமிழக அரசாங்கம் சுயமாக செயல்பட வேண்டும். இதை தான் மக்கள் விரும்புகிறார்கள். கட்டுப்பாட்டுக்கு உட்பட்டோ, பயமுறுத்தலுக்கு உட்பட்டோ, மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டோ இந்த அரசாங்கம் செயல்பட்டால், மக்கள் நலப்பணிகள் நிறைவேறாது.

வேலை வாய்ப்பு இழப்பு
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல்வேறு தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் போகிறது. தமிழ்நாடு இதனால் பல்வேறு இழப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

தரத்தை உயர்த்த வேண்டும்
பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளை விட குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. உடனடியாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். இதில் கல்வித்துறை முழுக்கவனம் செலுத்த வேண்டும்'. இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications