ரேஷன் கடைகளில் கேழ்வரகுடன் "இந்த" பொருளையும் வழங்கும் தமிழக அரசு! இனி விதவிதமான டிஷ் செய்யலாமே!
ஆத்தூர்: ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வரும் நிலையில் கேழ்வரகு வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசியையும் தமிழர அரசு வழங்கவுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தில் 37,328 ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில் 2545 கடைகள் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. நகர்ப்புறங்களில் 800 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை, கிராமப்புறங்களில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை என்றும் மலைப்பகுதிகளாக இருந்தால் 400 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை என பிரிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் மாதந்தோறும் மக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றில் அரிசி, கோதுமை இலவசமாகவும் மீதமுள்ள பொருட்கள் எல்லாம் மானிய விலையிலும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இவற்றுடன் கேழ்வரகு, சிறுதானியங்களை விநியோகம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜவ்வரிசியையும் தமிழக ரேஷன் கடைகளில் வழங்க போவதாக விவசாயிகள தெரிவிக்கிறார்கள்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அதிகளவில் மரவெள்ளி கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வப்போது ஜவ்வரிசி விலை குறைந்துவிடுவதால் மரவள்ளி கிழங்கு விலை கடுமையாக சரிகிறது. இதனால் போட்ட முதலை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இதனால் ஜவ்வரிசி விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். காலை உணவு திட்டத்தில் கூட ஜவ்வரிசியை சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சேலம் சேகோ சர்வ் செயலாட்சியர் கீர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் ஜவ்வரிசி விற்பனை அதிகரித்து மரவெள்ளி கிழங்கிற்கு கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜவ்வரிசியை வைத்து பாயாசம் மட்டும் செய்யாமல் அதில் வடை செய்யலாம், கொஞ்சம் அரிசி மாவை சேர்த்து அடை போல் தட்டலாம். ஜவ்வரிசி வற்றல் போடலாம். கஞ்சி மாவு அரைக்கும் போது சிறிதளவு சேர்க்கலாம்.












Click it and Unblock the Notifications