தனிக்காட்டு ராஜா! தமிழகத்தில் மதவெறி ஆட்டத்திற்கு இடம் கிடையாது! ஸ்டாலின் பேச்சு
கள்ளக்குறிச்சி: இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் மதவெறி கும்பலுக்கு பயப்படாமல் வாழும் அமைதியான சூழல் ஏற்படுத்தி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி பகுதிகள் இயங்கி வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி புதிய மாவட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் தேதி நடந்த விழாவில் தமிழகத்தின் 34 ஆவது மாவட்டமாக விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி உருவானது. இந்த மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம் நகரில் இயங்கி வந்தது. பல்வேறு அரசு அலுவலகங்கள் வேறு இடங்களில் இயங்கி வந்தன. இந்த நிலையில் அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் வீரசோழபுரம் பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் 8 தளங்களுடன் கொண்ட புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடம் ரூ 139.41 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா. மதவெறி கும்பலுக்கு பயப்படாமல் வாழும் அமைதியான சூழல் ஏற்படுத்தி உள்ளோம்.
விளையாட்டி சிறந்த மாநிலம் தமிழகம்தான் என ஸ்போர்ட்ஸ் ஸ்டார் விருது கிடைத்துள்ளது. மத்திய அரசின் முட்டுக்கட்டைகளை தாண்டி தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் வேறு இந்தியா உள்ளது. இந்தியாவிலேயே சிறந்த பொது போக்குவரத்து கொண்ட மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் மதநல்லிணக்கம்தான் பாஜகவின் கண்களை உறுத்துகிறது. திராவிட மாடல் ஆட்சியிருக்கும் வரை மதவெறி ஆட்டத்திற்கு இடம் கிடையாது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications