ஜில்' பீர் விற்பனை கடைக்கு ‘குடி’மகன்கள் வரவேற்பு: 10 இடங்களில் தொடங்க முடிவு
சென்னை: சென்னையில், 'ஜில்' பீர் விற்பனைக்காக, தனி கடை துவக்கப்பட்டதற்கு ‘குடி'மகன்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, கூடுதலாக, 10 இடங்களில், புதிதாக கடைகள் துவக்க, 'டாஸ்மாக்' அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், பீர் மற்றும் மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

சரிந்த விற்பனை
தமிழ்நாட்டில் நடப்பாண்டு பீர் விற்பனை 12 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டு 2.84 கோடி பெட்டிகள் பீர் விற்பனையானது. 2012-13ம் ஆண்டு 3.90 கோடி பெட்டிகள் பீர்கள் விற்பனை செய்யப்பட்டது. அதேசமயம் 2013-14 ம் ஆண்டு பீர் விற்பனை 3.20 கோடியாக சரிந்துள்ளது.

ஜில்பீர் கடைகள்
பீர் வகைகள் விற்பனையை அதிகரிக்கும் வகையில், 'ஜில்' பீர் விற்பனைக்கு மட்டும், தனி கடைகள் துவக்க, முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் ஜில்பீர்
முதற்கட்டமாக, சென்னை, நுங்கம்பாக்கம், 'பார்சன் காம்பளக்ஸ்' தரைத்தளத்தில், 'ஜில்' பீர் விற்பனைக்காக, நேற்று, தனி கடை துவங்கப்பட்டது. இங்கு, ஒரே நேரத்தில், 2,520 பீர் பாட்டில்கள் வைக்கக் கூடிய கொள்ளளவு கொண்ட, ஆறு பெரிய குளிர்சாதன பெட்டிகள் மூலம், 'ஜில்' பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

ரூ.2லட்சத்திற்கு விற்பனை
நேற்று ஒரே நாளில், இந்த கடையில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பீர் வகைகள் விற்பனையாகின. 'ஜில்' பீர் விற்பனைக்காக தனி கடை துவக்கப்பட்டதற்கு, 'குடி'மகன்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்தது.

10 கடைகள் திறக்க திட்டம்
சென்னை, அண்ணாசாலை, எழும்பூர், வேளச்சேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட, 10 இடங்களில், புதிய கடைகள் துவக்க, டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வாடகைக்கு இடம் தேவை
டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடை வாடகைக்கு கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. வாகன நிறுத்தும் வசதியுடன், மதுபான கடைகள் துவக்குவதற்கு ஏதுவான இடம் இருந்தால், அதன் உரிமையாளர்கள், சென்னை, எழும்பூர், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை அணுகலாம். அந்த இடங்களில், புதிய கடைகள் துவக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications