தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. கடலில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் சீற்றம்
பின்னர், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா வழியாக சத்தீஸ்கரை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் கனமழை
இதன் காரணமாக தமிழகத்தில் வடமாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னையிலும் இன்று பல இடங்களில் மாலை அல்லது இரவில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அதேபோல் மணிக்கு 65 முதல் 75 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இதனால் எனவே மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது
1ஆம் எண் புயல் கூண்டு
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக சென்னை, கடலூர், நாகை, பாம்பன், காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்யும் என அறிவித்துள்ளது.
மிதமான மழை
ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் பரமக்குடியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு திசையில் மேற்கு நோக்கி பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.