தேர்தல் திருவிழா... அனைத்து ஏற்பாடுகளும் தயார்... பாதுகாப்பு பணியில் 1,38,360 பேர்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம் காணும் தேர்தல் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி. அப்போது அவர் பேசியதாவது:-

தயார்...
நாளை தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 13 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.

சிறப்பு ஏற்பாடுகள்...
மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்குள் பூத் ஏஜெண்டுகள் கைப்பேசியை எடுத்துச் செல்ல கூடாது.

மலைப்பகுதி வாக்குச்சாவடிகள்...
1, 221 வாக்குச் சாவடிகளில் மலைப் பகுதியில் அமைந்துள்ளன. மலைப் பகுதிகளிலுள்ள 18 வாக்குச் சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனினும் மாற்று ஏற்பாடுகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அங்கு கொண்டு சேர்க்கப்படும்.

பாலு விவகாரம்...
அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதற்கு காரணங்கள் விளக்கப்பட்டுள்ளது. உளுந்தூர் பேட்டை பாமக வேட்பாளர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வழக்குகள்...
நேற்றைய நிலவரப்படி பணப்பட்டுவாடா தொடர்பாக 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.

பாதுகாப்பு பணி...
இது மட்டுமின்றி தேர்தலை அமைதியாக நடத்த மாநிலம் முழுவதும் 1,38,360 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்...
அதில், ‘தேர்தைலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5,417 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகள் 1,223 என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

வாகன சோதனை...
மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக இதுவரை 612 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 380 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விரைவு நடவடிக்கை குழுக்கள்...
தேர்தல் பாதுகாப்பு பணியில் 35,000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர மத்திய ஆயுதப் படை காவல் பிரிவைச் சேர்ந்த 20,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், எத்தகைய அவசர சூழ்நிலையையும் உடனுக்குடன் எதிர்கொள்ள ஏதுவாக மாநிலம் முழுவதும் 1,153 விரைவு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சிசிடிவி கேமராக்கள்...
தமிழகத்தில் மொத்தம் 1,38, 360 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 27,961 வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications