ஏப்ரல் 28 கடைசி வேலைநாள்.. 1 முதல் 9ம் வகுப்புகளுக்கான இறுதித்தேர்வு தேதி அறிவிப்பு.. முழுவிபரம்!
சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு நடத்துவதற்கான தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளதோடு, தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 ம் தேதி கடைசி வேலை நாளாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் முடிவடைந்துள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது. பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு என்பது மார்ச் 14ல் துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடந்து முடிந்தது.

இதன் தொடர்ச்சியாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. நேற்று தமிழ் தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு என்பது வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் 1 முதல் 9 ம்வகுப்பு மாணவ-மாணவர்களுக்கான தேர்வு நடைமுறை தொடர்பாக மாநிலம் முழுமைக்கான பொதுவான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது.
இதனால் ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் இறுதித்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். இந்நிலையில் தான் பள்ளி கல்வித்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வி ஆணையரும், தொடக்க கல்வி இயக்குனர் இணைந்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில் தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 21க்குள் தேர்வை முடிக்க வேண்டும். அதேபோல் 4 ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 28 ம் தேதிக்கள் தேர்வை முடிக்க வேண்டும். தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 ம் தேதி கடைசி வேலை நாளாக இருக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏப்ரல் 28 ம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications