திண்டுக்கல்: காவிரி மேலாண்மை வாரியம் கோரி செல்போன் டவரில் ஏறி போராடிய தமிழ் தேசிய கட்சியினர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திண்டுக்கல், மற்றும் நெல்லை மாவட்டங்களில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய தமிழ் தேசிய கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட இறுதி தீர்ப்பிற்கு பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை ஒரு திட்ட அமைப்பு தான் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ் தேசிய கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில், 6 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். அதேபோல நெல்லை மாவட்டம் கடையத்தில் தமிழ் தேசிய கட்சியை சேர்ந்த 14 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், செல்போன் டவரில் ஏறி திண்டுக்கல், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் போராட்டம் நடத்தியவர்களை கீழே இறக்கி அவர்களை கைது செய்தனர்.