தை முதல்நாளே தமிழ்புத்தாண்டு; சரித்திரத்தை மறக்க வேண்டாம்: கருணாநிதி
சென்னை: எந்தவொரு நாட்டிலே சரித்திரத்தை இழந்து விடுகிறானோ, அவன் வாழ்க்கையையும் மறந்து விடுகிறான் என்று சென்னையில் நடந்த கிராமிய கலை விழாவில் கருணாநிதி பேசினார். தை முதல்நாளே தமிழ்புத்தாண்டு என்றும் அவர் தெரிவித்தார்
தென் சென்னை மாவட்ட தி.மு.க. கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவின் தொடக்க விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவை தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கிவைத்தார்.
இதில், தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் தலைவர் கவிஞர் கனிமொழி எம்.பி. மேற்பார்வையில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மறக்கப்படாத சரித்திரம்
முதல் நாள் நடந்த துவக்க விழாவில், பேசிய கனிமொழி, எந்த ஒரு நாட்டில், சரித்திரத்தை மனிதன் மறந்து விடுகிறானோ, அவன், வாழ்க்கையை மறந்து விடுகிறான். தமிழர்கள் ஒன்று திரண்டு, வீழ்ந்த சமுதாயத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும்.எந்த மதம், ஜாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும், தமிழர்கள் என்றால், கொண்டாட வேண்டும் என்றார்.

கிராமிய கலைநிகழ்ச்சிகள்
தமிழர்களின் முக்கிய விழா, பொங்கல் திருநாள். இங்கு நடத்தப்படுகிற, கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், சாதாரண மனிதனின் வாழ்க்கையை, தூக்கி நிறுத்துவதற்காக நடத்தப்படுபவை. பாரம்பரிய மற்றும் மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகளை கொண்டாடவில்லை என்றால், நம் சரித்திரத்தை இழந்தவர்களாக ஆகி விடுவோம் என்று கூறினார்.

ஆட்சி மாறினால் காட்சி மாறுமா?
நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க., தலைவர், கருணாநிதி, தற்போது, ஆட்சி மாறினால், கலாசாரமும், பண்பாடும் மாறவேண்டிய நிலையே உள்ளது. போற்றி, பாராட்டப்பட்ட கலைகள் எல்லாம், குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.'தை பிறந்தால், வழி பிறக்கும்' என்று சொல்ல தெரியும். ஆனால், தமிழ் புத்தாண்டு என்றால், எப்போது என்று தெரியாத நிலையில், தமிழன் இருந்தான். தை முதல் நாள் தான், தமிழ் புத்தாண்டு என்பதை, திராவிட இயக்கமே ஞாபகப்படுத்தியது.

கனிமொழியே தலைவர்
ஆகவே தான் வரலாற்று கணக்கின்படி, சரித்திர சான்றுகளின்படி நாம் பெற்றிருந்த கலை, பண்பாடு இவற்றுக்கெல்லாம் சிறிதளவு அழிவும் ஏற்படாமல், அவற்றை காப்பாற்ற வேண்டும் என்பதற்கான முயற்சியாகத்தான் கனிமொழி இந்த இயக்கத்தின் சார்பாக நம்முடைய கிராமிய கலைகளை வளர்த்தால், நம்முடைய பழைய பண்பாட்டு கலைகளை வளர்த்தால், பழைய வரலாறுகளைத் தெரிந்துகொள்ள முடியும், புரிந்துகொள்ள முடியும் என்ற அந்த ஆசையின் காரணமாகத்தான், இந்த கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை உருவாகியிருக்கிறது. அந்த பேரவையின் தலைவராக கனிமொழி விளங்குகிறார்.

கரகாட்டம், மயிலாட்டம்
கிராமிய கலை நிகழ்ச்சியில் மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஈரோடு பம்பை கைச்சிலம்பம், சின்னபொண்ணு குமார் குழுவினரின் கிராமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது அனைவரையும் கவரும் வகையில் இருந்த இந்த நிகழ்ச்சிகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி நிகழ்ச்சி முடியும் வரை சுமார் 1 மணி நேரம் ரசித்து பார்த்தார். ஆனால் இரண்டாம் நாளில் கனிமொழி, அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா உள்ளிட்டோர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை ரசித்தனர்.

தோல்பாவைக்கூத்து
மறக்கப்பட்ட நிகழ்வான தோல்பாவைக்கூத்து இந்த தமிழர் திருவிழாவில் இடம் பெற்றிருந்தது. ஆனால் அதிலும் சினிமா பாடலுக்கு பொம்மைகள் நடனமாடின.

விளையாட்டுப் போட்டிகள்
சிறுவர்கள்,பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. உரியடித்தல், பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை ஆர்வத்துடன் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

உணவுத்திருவிழா
ஊர் பெயரை சொன்னதும் அனைவரின் நினைவிற்கும் வரும் உணவு வகைகளும் இந்த விழாவில் இடம்பெற்றிருந்தன.விருதுநகர் பால்கோவா, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, மதுரை ஜிகர்தண்டா, விருதுநகர் எண்ணெய் புரோட்டா உள்ளிட்ட உணவுகளும் பார்வையாளர்களுக்கு சுவை படைத்தது.

சங்கமத்திற்கு பதில்
திமுக ஆட்சி காலத்தில் சென்னை நகரம் முழுவதும் தை முதல்நாள் தொடங்கி காணும் பொங்கல் வரை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய இடங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் சங்கமம் கலை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழர் திருநாளை கனிமொழி தலைமையில் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications