வீரலட்சுமியை கண்டு கொள்ளாத தமிழ் அமைப்புகள்: வருத்தத்தில் ஆதரவாளர்கள்
சென்னை: காங்கிரஸ் அலுவலகத்தில் நுழைந்து போராட்டம் நடத்தி, அடி தடி வரை சென்ற வீரலட்சுமியை தமிழ் அமைப்புகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
இந்த நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், இது குறித்து மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தமிழகத்திலும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் பெருத்த வரவேற்பை பெற்றது. ஆனால் மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் கடும் அதிர்ச்சி அடைந்து தமிழக அரசின் செயல்பாட்டை குறை கூறியதோடு, கடும் விமர்சனம் செய்து வந்தது. மேலும், தமிழக அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடையும் பெற்றது. இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக் கூடாது என காங்கிரஸார் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழர் பாதுகாப்புப் படை என்ற அமைப்பின் தலைவர் வீரலட்சுமி தலைமையில் சிலர் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்குள் அதிரடியாக நுழைந்து போராட்டம் நடத்தவே அவர்களுக்கு அடி உதை விழுந்தது. போலீஸ் தடியடி நடத்தியது. இதனையடுத்து, தமிழர் படையைச் சேர்ந்த சுமார் 300 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் அந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமியும் ஒருவர்.
இது குறித்து வீரலட்சுமியின் ஆதரவாளர்கள் கூறுகையில்,
வீரலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டாம், குறைந்த பட்சம் மனிதாபிமான ரீதியில் அவர்களை வந்து பார்த்து ஆறுதலாவது சொல்லி இருக்கலாம்.
நாங்கள் என்ன எங்களுக்காகவா காங்கிரஸ் அலுவலகத்தில் நுழைந்தோம், தமிழர்களுக்காகத் தான் நுழைந்தோம். போராட்டம் நடத்தினோம். அடி வாங்கினோம். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் வைகோ, நெடுமாறன், சீமான், கொளத்தூர் மணி, தியாகு, களஞ்சியம், பொழிலன், திருமுருகன் காந்தி, அரங்க குணா, திருமாவளவன், சுப.வீரபாண்டியன், குடந்தை அரசன், பெ.மணியரசன் போன்றவர்கள் கூட தங்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications