தமிழிசை ஏன் பதவியில் நீடிக்கிறார் - அதிரும் அமித் ஷா, மோடி கணக்கு
தமிழிசை ஏன் பதவியில் நீடிக்கிறார் என்றால் அதற்கு அமித்ஷாவும் மோடி போட்டுள்ள புதிய கணக்குதான் காரணமாம்.
சென்னை: ' தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மாற்றம் குறித்து வெளியான தகவல் தவறானது' என அக்கட்சியின் தேசியத் தலைவர் முரளிதர் ராவ் ட்வீட் செய்ய, ' என் மீது தலைமை வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. இதற்காக முரளிதர் ராவுக்கு நேரில் நன்றி தெரிவித்தேன்' என நெகிழ்ந்திருக்கிறார் டாக்டர்.தமிழிசை.
'எய்ம்ஸ் மருத்துவமனை யாரால் வந்தது?' என அன்புமணிக்கும் தமிழிசைக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்கும் அளவுக்குச் சென்றது. 'மாநிலத் தலைவராக அவருக்கு என்ன தகுதியிருக்கிறது?' என அன்புமணி கூற, ' எனக்கு ஏராளமான தகுதிகள் இருக்கிறது. அவரைவிட மருத்துவத்தில் அதிக பட்டங்களை நான் வாங்கியிருக்கிறேன்' என ஆத்திரப்பட்டார் தமிழிசை.
இந்நிலையில், 'தமிழிசை மாற்றப்பட்டார்' என்ற தகவல் வெளியானது. இதற்கு தமிழிசை தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. மாறாக, பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர் ராவ் இந்தக் கருத்தை மறுத்து ட்வீட் செய்தார். இந்த ட்வீட் தமிழிசை ஆதரவாளர்களுக்குக் கடுப்பை வரவழைத்தது. ' அடுத்த மாநிலத் தலைவர் சி.பி.ஆரா? வானதியா? ராஜாவா?' எனத் தொடர்ந்து நடந்து வந்த பட்டிமன்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் முரளிதர் ராவ்.

மீண்டும் தலைவர்
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழிசை ஆதரவாளர் ஒருவர், " மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தமிழிசையை நீக்குவதற்கு கடந்த ஓராண்டு காலமாகவே சிலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆர்.கே.நகர் தேர்தலை ஒரு முக்கிய ஆயுதமாக எடுக்கவும் அவர்கள் திட்டமிட்டனர். அனைத்திலும் அவர்களுக்குத் தோல்வியே மிஞ்சியது. தற்போது மத்திய கயிறு வாரியத் தலைவராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், மீண்டும் மாநிலத் தலைவர் பதவிக்கு வரத் துடிக்கிறார்.

சில காரணங்கள்
ஏற்கெனவே ஒருமுறை அவர் தலைவராக இருந்திருக்கிறார். 'அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது, மற்றவர்களுக்கு சீட் ஒதுக்கும் பொறுப்பு தனக்கு வர வேண்டும்' என விரும்புகிறார். இந்த விவகாரத்தில் தமிழிசை மாற்றப்படாமல் இருப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன" என்றார்.

ஒதுக்கும் வேலைகள்
" தமிழக பா.ஜ.கவில் யாரெல்லாம் அத்வானி ஆதரவாளர்கள் என அகில இந்திய தலைமை கணக்கெடுத்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருந்து அத்வானி மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவர்களையெல்லாம் ஒதுக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் பட்டியலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிலர் இருக்கின்றனர்.

உண்மை
இதற்கு முன்பு தலைவராக இருந்து தற்போது மத்தியில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீதும் தலைமையின் சந்தேகக் கண்கள் விழுந்திருக்கின்றன. அவருடைய முக்கியத்துவத்தைக் குறைப்பதற்காகவே தமிழிசையை பதவியில் தொடர வைக்கின்றனர். சமுதாய ரீதியாக கிடைக்கும் செல்வாக்கை விட்டுவிடக் கூடாது என்பதும் பிரதான காரணம். இந்த உண்மையைத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டார் அந்த மாண்புமிகு.

கம்யூனிட்டி ஆதரவு
' ஒருவரை ஓரம்கட்டும்போது அதே சமூகத்தில் உள்ள இன்னொருவரை பிரதானப்படுத்துவதால் பேக்கிங் கம்யூனிட்டி ஆதரவு தொடரும்' என அமித் ஷாவும் மோடியும் கணக்கு போடுகின்றனர். இதன் பின்னணியில் மோடிக்குப் பக்கபலமாக இருக்கும் குஜராத்தைச் சேர்ந்த தமிழ் அதிகாரிகளும் உள்ளனர். இதனால்தான் இரண்டாவது முறையாக தலைவர் பதவியில் நீடிக்கிறார் தமிழிசை.

மாற்ற வேண்டும்
இந்தக் கணக்குகளைத் தெரிந்து கொள்ளாமல், தமிழிசையை மாற்ற வேண்டும் என டெல்லிக்கு அடிக்கடி பறந்து கொண்டிருக்கின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள்" என்றார் இயல்பாக.












Click it and Unblock the Notifications