நீட் தேர்வு குறித்து கனிமொழி தவறான தகவலை பரப்பிவருகிறார்- தமிழிசை குற்றச்சாட்டு!
நீட் தேர்வு குறித்து திமுக எம்.பி. கனிமொழி தவறான தகவலை பரப்பி வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: நீட் தேர்வு குறித்து திமுக எம்.பி. கனிமொழி தவறான தகவலை பரப்பி வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவை விமர்சனம் செய்ய ஒன்றுமே கிடையாது என்றும் தமிழிசை கூறினார்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த வாரம் நடைபெற்றது. தமிழகத்தில் 8 நகரங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 88 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினர்.
நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர். தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முதல்முறையாக நீட் தேர்வு நடைபெற்றது.
இதனிடையே நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிப்பதால் சமூகத்திற்கு எதிரானது என ராஜ்யசபா திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். 50% இடஒதுக்கீடு கேட்டு போராடும் அரசு மருத்துவர்களுக்கு திமுகவின் ஆதரவு உண்டு எனவும் கனிமொழி அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என அவர் உறுதியாக தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்து தவறான தகவலை கனிமொழி பரப்பி வருகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவை விமர்சனம் செய்ய ஒன்றுமே கிடையாது என்றும் அவர் கூறினார்.