ஆளுநரை அரசியல்வாதி போல் விமர்சிப்பதா? சசிகலாவுக்கு தமிழிசை கடும் கண்டனம்
சசிகலாவின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவை உடைக்க ஆளுநர் சதி செய்வதாக சசிகலா கூறிய புகாருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நொடிக்கு நொடி மாறும் அரசியல் சூழ்நிலையால் தமிழக அரசியல் வட்டாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டுக்கு நேரில் சென்று அங்கு தனது ஆதரவு எம்.எல்.ஏ-களுடன் தனித்தனியாகவும், பின்னர் கூட்டாகவும் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டு போயஸ் கார்டன் திரும்பிய சசிகலா செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவை உடைக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சதி செய்வதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சசிகலாவின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆளுநரை அரசியல்வாதி போல் விமர்சித்து கருத்து கூறுவது சரியானது அல்ல என்றும் குழப்பமான சூழ்நிலையில் ஆளுநர் கால அவகாசத்தை எடுத்துக் கொள்வது தவறில்லை என்றும் கூறிய தமிழிசை, எதிர்ப்புக் குரல் வரவில்லை என்றால் ஆளுநரை ஆட்சி அமைக்க அழைத்திருப்பார் என்றும் கூறினார்.