கூலிப்படைகளை காலி செய்யுங்கள்.. தமிழிசை ஆவேசம்!
சென்னை: தமிழகத்தில் கூலிப்படையினர் அட்டகாசம் பெருகி விட்டது. கூலிப்படைகளே இல்லாத அளவுக்கு அவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகருக்குள் ஒன்று அல்லது இரண்டு கொலைகள், தினமும் நடக்குமென்பது எழுதப்படாத விதியாகி விட்டது. சென்னை கோடம்பாக்கத்தில், உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் முருகன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் சென்னை நகர மக்களை மட்டுமின்றி தமிழக மக்களையே ஆங்காங்கே நடைபெறும் இத்தகைய படுகொலைகள் அதிர்ச்சியும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளன. மக்களுடைய நியாயத்துக்காக போராடும் வழக்கறிஞர்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது. இந்த மாதிரி கொலை செய்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக மிக சுலபமாக வெளியே வந்து விடுகிறார்கள்.
கூலிப் படைகளை வேரோடு அழிக்க வேண்டுமென்றால் மிகக் கடுமையான தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் தனி சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழிசை கூறியுள்ள வழக்கறிஞர் முருகன் படுகொலையை, அவரது மனைவிதான் திட்டமிட்டு நடத்தியுள்ளார். தனது கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் கூலிப்படையை ஏவி கணவரை மனைவியே கொன்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications