கூட்டணியில் இருந்து கொண்டே முதல்வர் பதவிக்கு வேட்பாளர் அறிவிப்பதா? - பாமகவுக்கு தமிழிசை கண்டிப்பு
ராமேஸ்வரம்: தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதல்வர் பதவிக்கு நான், நீ என்று போட்டி போடுவதும், வேட்பாளர் அறிவிப்பதும் கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பா.ஜனதா கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவுக்கு மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எந்த தேர்தலாக இருந்தாலும் கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும். ஊழலுக்கு எதிரான ஆட்சி, பா.ஜனதா ஆட்சி. நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தே.மு.தி.க.வினர் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலுக்கு முன்னதாகவே முதல்வர் பதவிக்கான வேட்பாளர் என அறிவிப்பு வெளியிடுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. அது கூட்டணியின் வெற்றியைப் பாதிக்கும். திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தியை பாஜக கூட்டணி உருவாக்கும்.
சட்டமன்றத் தேர்தல் வரும்போது நல்ல கூட்டணி அமைந்து 2016-ல் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சிஅமைக்கும். தற்போது தமிழகத்தில் பல லட்சம் உறுப்பினர்கள் விரும்பி சேர்ந்துள்ளனர்.
ரஜினிகாந்த் பா.ஜனதாவில் இணைவாரா என்ற கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிப்பதை விட, அவர் பதிலளிப்பதுதான் சரியாக இருக்கும்.
பிரதமர் மோடி இலங்கை தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன்பிடிக்க நிரந்தர தீர்வு காணப்படும்," என்றார்.












Click it and Unblock the Notifications