ரசிகர்களின் பணத்தில் சொகுசாக வாழும் நடிகர்கள் மழைக்கு உதவவில்லையே... தமிழிசை வருத்தம்
சென்னை: ரசிகர்கள் கொடுக்கும் பணத்தில் சொகுசாக வாழும் சினிமா நடிகர்கள், அந்த ரசிகர்களாகிய மக்கள், வெள்ளத்தில் துயரப்படும்போது அவர்களுக்கு உதவ மனமின்றி இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
நடிகர்களின் கட்-அவுட்டிற்கே பாலாபிஷேகம் செய்யும் அளவிற்கு தீவிரமானவர்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால், கொட்டிய மழையால் வெள்ளம் சூழ்ந்து அவர்கள் குடிக்கப் பால் கூட கிடைக்காமல் திண்டாடி வரும் நாட்களில், அவர்கள் தெய்வங்களாக கருதிய நடிகர்கள் யாரும் மனமிறங்கவில்லை.
இந்நிலையில், நடிகர்களின் இந்த செயல் தனக்கு வருத்தம் அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து வார இதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மீட்புப் பணியில் பாஜக...
மழை ஆரம்பித்த நாளில் இருந்து நானும், எங்களது கட்சித் தொண்டர்களும் இரவு பகல் பாராமல் பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளையும், நிவாரண உதவிகளையும் செய்து வருகிறோம். பல இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தியிருக்கிறோம்.

விஜயகாந்த், ஸ்டாலினைப் பாராட்டலாம்...
ஆனால் ஆளும் கட்சியோ, வெறும் விளம்பரத்துக்காக அமைச்சர்களை அனுப்புகிறது. இந்த விஷயத்தில் விஜயகாந்த், ஸ்டாலின் ஆகியோரைப் பாரட்ட வேண்டும்.

நடிகர் சங்க நிர்வாகிகள்...
ஆனால், நடிகர் சங்க நிர்வாகிகள் மழை நிவாரணம் குறித்து முதல்வரைச் சந்திக்கப் போகிறார்கள் என்று நினைத்தால், வேறு எதையோ பேசிவிட்டு வந்திருக்கிறார்கள்.

வருத்தம்...
ரசிகர்கள் கொடுக்கும் பணத்தில் சொகுசாக வாழும் சினிமா நடிகர்கள், அந்த ரசிகர்களாகிய மக்கள் வெள்ளத்தில் துயரப்படும்போது, அவர்களுக்கு உதவ மனமின்றி இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வருத்தமாகத் தான் இருக்கிறது.

மத்திய அரசின் உதவி...
மத்திய அரசுதான் ராணுவத்தையும், கப்பற்படையையும் மீட்புப் பணிக்கு அனுப்பியது. தேவைப்பட்டால் கூடுதல் படையையும் அளிக்கத் தயாராக இருக்கிறது.

ஏன் முதல்வர் தயங்குகிறார்?
இதற்கு எல்லாம் முன்னதாக மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கைவைக்க வேண்டும். ஆனால், நம் முதல்வர் ஏனோ கேட்கவில்லை.

எதிர்ப்பிற்குப் பின்னரே...
பலத்த எதிர்ப்புக்குப் பிறகுதான், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி உதவி கேட்டுள்ளார். அமைச்சரும் உதவுவதாகச் சொல்லி இருக்கிறார். கட்சித் தலைவரிடம் நிலையைச் சொன்னதும் உடனடியாக ஒரு கோடி ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

நிவாரண நிதி போதாது...
மாநில அரசு வெள்ளப் பாதிப்பு தொடர்பான அறிக்கையைச் சமர்பித்ததும் மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கும். ஆனால், மாநில அரசு ஒதுக்கி இருக்கும் 500 கோடி ரூபாய் போதாது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications