மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை... நிதி கொடுக்கிறார்கள் - தமிழிசை சப்பைக்கட்டு
மத்திய அரசு வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழக மக்களிடம் பாரபட்சமாக நடந்துக்கொள்ளவில்லை என தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: வறட்சி நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சிக்கு இந்த ரூ.1,748 கோடி நிவாரணம் வழங்க உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. முன்னதாக வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.2,096.80 கோடி வழங்க மத்தியக் குழு பரிந்துரை செய்தது.

தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்த மத்தியக் குழு, வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.2,096.80 கோடி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. தேசிய செயற்குழுவின் துணை கமிட்டியோ ரூ.1,748.28 கோடி மட்டுமே தர பரிந்துரை செய்தது.
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என மாநில அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது ஆனால் வெறும் ரூ.1,748 கோடி மட்டுமே தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் கொந்தளித்து போயுள்ளனர். மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து நிர்வாக ரீதியாக பணம் வந்துகொண்டு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு மத்திய அரசு கொடுத்த பணம் எப்படி செலவிடப்பட்டது என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுத்த நிலுவைத்தொகையை தமிழக அரசு விவசாயிகளுக்கு தரவில்லை அதனால் போராட்டம் நடைபெற்றது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு செய்வதற்காக கொடுத்த தொகை திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
ரூ. 40000 கோடி கேட்பது நமது உரிமை என்றும் மத்திய அரசு ஆய்வு செய்து நிதி வழங்கும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications