ஐஎஸ்ஐஎஸ்-ல் சேர தொடர்ந்து அழைப்பு வருகிறது... போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன் தமிழிசை கேள்வி!
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர வேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
Recommended Video
கோயம்புத்தூர்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர வேண்டும் என்று பாஜகவினருக்கு தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணம் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோவையில் பாஜக அலுவலகம் மீதும் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டிலும் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. இதே போன்று கடந்த 7ம் தேதி பாஜகவின் மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளையும் போலீஸ் கைது செய்யவில்லை என்று அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பாஜகவினருக்கு தொடர்ந்து அழைப்பு
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேருமாறு தொடர்ந்து பாஜக தொண்டர்களுக்கு குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. காவல்துறையிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை, போலீசாரின் மெத்தன போக்கு காரணமாக பாஜகவினர் மீதான வன்முறை தாக்குதல்கள் தொடர்கிறது.
போராட்டம் தீவிரமடையும்
பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வரும் போக்கை தடுத்து நிறுத்த வேண்டிய நேரமிது. வன்முறையாளர்களை கைது செய்யாமல் இதற்கு மேலும் போலீசார் காலம் தாழ்த்தினால் பாஜக தீவிர போராட்டத்தில் இறங்கும்.
ஒரு கை பார்த்துவிடலாம்
இரவு நேரங்களில் எங்கள் அலுவலகத்திலும், மாவட்ட தலைவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசிய கோழைகள் யாராக இருந்தாலும் இப்போது நேரில் வாருங்கள். யார் எரிகிறார்கள் என்பதை ஒரு கை பார்த்துவிடலாம். பெட்ரோல் குண்டுகள் வீசினாலும் பாஜக தொண்டனை எதுவும் செய்யமுடியாது, இது கருப்பு மண் இல்லை காவி மண்.
காவிகள் ஆளக் கூடாதா?
ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ரத்தம் கொடுப்பவர்கள், ரத்தத்தை எடுப்பவர்கள் இல்லை. தமிழகத்தில் பாவிகள் ஆளும் போது, காவிகள் ஆளக்கூடாதா? பா.ஜ.க-வினர் மீது நடந்த கடைசி தாக்குதலாக இது இருக்கட்டும். பா.ஜ.க-வினர் மீது இனி யாரும் கைவைக்ககூடாது அப்படி கை வைத்தால் கை இருக்காது என்றும் தமிழிசை சவுந்திரராஜன் காட்டமாக தெரிவித்தார்.