தமிழக எம்பிக்கள் ராஜினாமா விவகாரம்: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி
தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்வது என்ற விவகாரம் குறித்து ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்வோம் என்று ஸ்டாலின் கூறியுள்ள விவகாரம் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் நீர் திறந்துவிடுவதில் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வராத நிலையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்ற ஒற்றை வார்த்தையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதமரை சந்திப்போம்
அதை செயல்படுத்துவது குறித்து அனைத்து கட்சிகள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சித் தலைவர்களும் சேர்ந்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என்று முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் சந்திக்க மறுப்பு
இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் ஆலோசனை நடத்த ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார். அப்போது அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திக்க பிரதமர் அனுமதி மறுப்பதாகவும் அதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்திக்குமாறு அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ராஜினாமா செய்ய வேண்டும்
இதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக எம்பிக்கள் அழுத்தம் கொடுப்பதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி
காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. ஸ்டாலின் கருத்து குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில் , காவிரி பிரச்னை தொடர்பாக எம்பிக்கள் ராஜினாமா செய்வோம் என கூறுவது கனிமொழி ராஜினாமா செய்தது போன்றா? அல்லது கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது போலவா? என தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.