கட்டுடல் காளைகளும் காளையும் கலாச்சார பொலிவுடன் விளையாடும் பொங்கலாகவும் ... தமிழிசை வாழ்த்து!
சென்னை: புதியன புகும் ஒரு புதிய பொங்கலாக இப்பொங்கல் மலர்ந்துள்ளது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இதுகுறித்த இவரது அறிக்கையில், "மத்தியில் நம் மோடியின் தலைமையில் அமைந்துள்ள நல்லாட்சி பீடுநடை போட்டு வருகிறது. வங்கி கணக்கு இல்லாதவர்கட்கெல்லாம் வங்கிக்கணக்கு துவங்க மக்கள் நிதி திட்டம் சமையல் எரிவாயுவுக்கான மானியம் மக்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டம், நாட்டில் தூய்மை பற்றிய விழிப்புணர்வும் லஞ்சம் ஒழிப்புணர்வும் ஏற்படுத்தும் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் இந்த ஆட்சி மக்களின் வாழ்க்கையில் இன்பம் பொங்கும் ஆட்சியாகவும் மகிழ்ச்சி தங்கும் ஆட்சியாகவும் எங்கும் நல்லாட்சி மிளிரும் ஒரு சிறந்த ஆட்சியாகவும் ஒரு புதிய சூழ்நிலையை பாரத தேசத்தில் பதிய வைத்திருக்கிறது.
லஞ்சம், ஊழல், கடன் கருப்புபணம், வேலைவாய்பின்மை போன்ற பழையனவைகள் கழிந்து வேலை வாய்ப்பு, நேரடி மானியம், தூய்மை, வாய்மை, பசுமை, மகிழ்ச்சி போன்ற புதியன புகும் ஒரு புதிய பொங்கலாக இப்பொங்கல் மலர்ந்துள்ளது.
ஆரம்பத்திலேயே ஏற்பட்ட இந்த மகிழ்ச்சி இன்னும் போகப் போக பாரத தேசத்தில் ஓங்கி வளரும் உயர்ச்சியளிக்கும் முயற்சியில் நம் அரசு முனைந்துள்ளது. அதே நல்ல சூழ்நிலை தமிழகத்திலும் நிலவ, ஒரு டாஸ்மாக் இல்லாத தமிழகம், லஞ்ச லாவண்யம் இல்லாத தமிழகம், மின்வெட்டில்லாத தமிழகம், அடிப்படை கட்டமைப்புக்கள் உள்ள தமிழகம் மலர இந்தப் பொங்கல் வழிவகுக்கட்டும்.
இந்தப் பொங்கல் நம் தமிழர்களின் வாழ்க்கையிலும், இலங்கையில் வாழும் தமிழர்கள் வாழ்க்கையிலும் இன்பம் பொங்கும் பொங்கலாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கட்டுண்ட ஜல்லிக்கட்டும் நாம் மேற்கொண்டுள்ள முயற்சியினால் கட்டவிழ்க்கப்பட்டு, கட்டுடல் காளைகளும் காளையும் கலாச்சார பொலிவுடன் விளையாடும் பொங்கலாகவும் இப்பொங்கல் அமையும் என்று நம்புவோமாக.
தமிழகத்தில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக பாஜக கட்சி சார்பில் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.